Monday, 29 February 2016

ஜீவ சமாது பற்றி அறிய

     ஜீவன் இருக்கும் பொழுதே சமாதியில் அடங்குவதே ஜீவ சமாது ஆகும். முக்காலங்களில் சித்தகர்களும், முனிவர்களும், ரிஷிகளும் இம்முறையையே கையாண்டுள்ளனர். அதாவது மகான்களுக்கு ஞானம் கிடைத்த பின் அவர்கள் உலகில் வாழ விருப்பமில்லை, நமக்கு ஆயுள் போதும் என்று நினைக்கும் பொழுது, அவர்கள் விரும்பிய இடத்தை தேர்வு செய்து, அந்த இடத்தில் தனக்கு சமாது எழுப்புவர். இதுவே ஜீவ சமாது எனப்படும். அப்படிப்பட்ட இடங்களில் இறைவன் அருள் பூரணமாய் இருக்கும். இதனை ஆன்மீகப் பாதையில் உள்ள அனைவரும் எளிதில் உணர முடியும்.

         இப்படிப்பட்ட ஜீவ சமாதுவை அமைக்க சில வழிமுறைகளை மகான்கள் வகுத்துள்ளனர். அதனை விரிவாகக் கூறுகிறேன். ஒரு மகான் சமாதி நிலை அடைந்தால் அவரை எரிக்கக் (தீயில்) கூடாது. புதைக்கத்தான் செய்ய வேண்டும். அவ்வாறு புதைக்காமல் எரித்துவிட்டால் அவ்வூரில் உள்ள கோயிலுக்குத் தீவைப்பதாக ஆகிவிடும். அந்த ஊரில் ஏழு ஆண்டுகள் மழை பெய்யாது என்று சாஸ்திரம் கூறுகிறது. இது மிகப் பெரிய பாவமாகும். எனவே புதைக்கவே செய்ய வேண்டும். இதனை நான் கூறவில்லை புராணங்கள், இதிகாசங்களில் கூறப்பட்டுள்ளது. இம்முறையில் சமாது அடைந்தவர்களின் தலையைத் தெற்குப் பக்கமாகவும், கால்களை வடக்குப் பக்கமாகவும் வைத்துத்தான் புதைக்க வேண்டும்.

        மூச்சுப் பயிற்சி எவர் செய்கின்றாரோ உண்மையில் அவர் ஒரு மகான் மேலும் மகான்கள் இறந்துவிட்டால் அவர்கள்சமாதுக்கு மேல் ஒரு சிவ லிங்கத்தை வைக்க வேண்டும். ஆனால் பிரமச்சாரி இறந்து விட்டால் அவரது சமாதியில் சிவலிங்கத்தை வைக்கக்கூடாது. ஏனெனில் சிவலிங்கத்தில் லிங்கம் என்பது ஆணின் இன உறுப்பு, கீழுள்ள ஆவுடை பெண் இன உறுப்பு. எனவே ஆணும் பெண்ணும் ஒன்று சேர்ந்து தாம்பத்தியத்தில் இருந்தவர்களுக்கு மட்டுமே சிவலிங்கம் உகந்தது. பிரமச்சாரி எனில் அவர் பெண்ணுடன் சேர்ந்து இருக்க மாட்டார்கள். எனவே சிவலிங்கம் வைக்கக் கூடாது.

        மேலும் சமாது மீது வைக்கப்படும் லிங்கம் ஆனது ஒரே கல்லில் செதுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதாவது லிங்கமும், ஆவுடையும். தனித்தனியே இல்லாமல் ஒரே கல்லினால் செய்யப்பட வேண்டும். ஆலயங்களில் வைக்கப்படும் சிவலிங்கம் தான் லிங்கமும், ஆவுடையும் தனித்தனியே செய்து ஒன்று சேர்க்க வேண்டும். சமாதியல் லிங்கம் வைக்க வசதியில்லை. எனில் ஒரு அரசமரத்தை நட்டு வைக்க வேண்டும். சிவலிங்கத்திற்குரிய பலனை அரசமரம் தரும். திருமணமான சாதுவுக்கு மட்டுமே சமாதியில் சிவலிங்கம் வைக்க வேண்டும். திருமணமாகாத வர்களுக்கு சிவலிங்கம் வைக்கக்  கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home